*தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் ?? எதை கேட்க வேண்டும்??*
*ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்* பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார். கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு, கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு. பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது, பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது, பிரார்த்தனை செய்தேன் வேலை கிடைத்து விட்டது என்று சந்தோஷப்படுவது எல்லாம்... கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும். முக்கியமாக, "நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரிய வைத்தார். தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது... "எனக்கு வேலை கிடைக்க வேண்டும், எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும், ப்ரோமோஷன் வேண்டும், நோய் தீரணும், என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்" என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே' என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது... உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார். நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார். (1) கர்வம் : தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க வேண்டியது... "பகவானே!! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்" என்று கேட்க வேண்டும். நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்). இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்" என்று இருக்கும் கர்வமே காரணம். அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும். "எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா? (2) ஆசை : நாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை... 'பகவானே!! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர். நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகிக் கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது. ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது. அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது. முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும். திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும். கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல, மனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது. பகவான் அனுக்கிரஹத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும். (3) திருப்தி : நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை... 'பகவானே!! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர். பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்... "யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: ! சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே!!'" (4 chapter, 22 sloka) என்று சொல்லும் போது, "நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது"என்கிறார். தெய்வ அனுகிரஹத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும். பகவான் அனுக்கிரஹத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும். (4) இரக்கம் : நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை... 'பகவானே!! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில் இரக்க சிந்தனை உருவாகும்படி செய்யுங்கள்" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர். நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்". இரக்க குணம் உள்ளவனுக்கு, மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும். "இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது. 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல, மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல, எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது. தெய்வம், அனுக்கிரஹம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும். பகவான் அனுக்கிரஹத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும். (5) மோக்ஷம் : நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை, 'பகவானே!! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர். இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை. இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது... "புனரபி ஜனனம், புனரபி மரணம், புனரபி ஜனனீ ஜடரே சயனம் I இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே க்ருபயா பாரே பாஹி முராரே!!" என்று பாடுகிறார். இதற்கு அர்த்தம், "பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகிக் கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று. கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார். நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும். செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும். ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார ஸாகரத்தில் சூழல்வது? 'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல, மனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல, ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. தெய்வம், அனுக்கிரஹம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும். "உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும், பகவானிடம் கேள்" என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லித் தருகிறார். *நீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்துக் கொண்டே இரு* *பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அனுக்கிரஹித்து விட்டால் இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா? இதை விட்டு மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே* 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *இன்றைய நாள் இனிய நாளாக, நலம் தரும் நாளாக அமைய வாழ்த்துக்கள்*🙏 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dduk2nVmpzGzj12DX3cFp%3DM%2BpdLiyOD4%3DE%2Bneq7xyxOJBw%40mail.gmail.com.
